வேதார்த்த ஸங்க்ரஹம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 11

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

அத்வைத விமர்சம் 

பத்தி 40

ஓர் ஆக்ஷேபம் எழுப்பப்படலாம். “ஸதேவ ஸோம்ய! இதமாக்ர ஆஸீத், ஏகமேவ அத்விதீயம்” எனும் ச்ருதி வாக்யத்தில் ஏகமேவ (ஒன்றே ஒன்று) ஸதேவ (ஸத் மட்டுமே) என்பதில் ஒன்றே மட்டும் என வலியுறுத்தல் இருமுறை வருகிறது. ஆகவே, இவ்வாக்கியத்தின் நோக்கம் ஸஜாதீய (தன் வர்க்கத்தில் வேறு ஒன்று) பேதமும் விஜாதீய (பிற வர்க்கத்தில் வேறு ஒன்று) பேதமும் இல்லை என்பதே அது.   

இந்த ஆக்ஷேபத்தில் உள்ள நிலை உறுதியானதன்று. மண், குடம் என முன்பு சொல்லப்பட்ட உதாரணத்தில் தெளிவாயுள்ளது: காரணம், கார்யம் என இருவகையில் நமக்கு ஞானம் உண்டாகிறது. ஆகவே பொருள் ஒன்றே, அதன் நிலைகள் வேறு என. ச்வேதகேது ப்ரஹமமே எல்லாவற்றின் மூல காரணம் என்பதை அறிந்திலன் ஆதலால் அவனுக்கு உபதேசம், “ஸதேவ ஸோம்ய!” என்று தொடங்குகிறது.  

ஸதேவ இதமக்ர ஆஸீத்” என்பதில் உள்ள “அக்ரே” சப்தம் காலப்ரமாணம் குறிக்கிறது. இதில் இப்போது தெரிகிற இந்த ப்ரபஞ்சம் முன்பு ”இதம்” என்று இருப்பாகிற ஸ்திதியை அடைந்தது என்று காட்டுகிறது. “ஏகமேவ” என்பதால் பல எனும் நிலைக்கான நாமங்கள் வடிவங்கள் வேறுபாடு புலப்படவில்லை. ஆகவே இவ்வளவால் ஸத் என்பதே ப்ரபஞ்சத்தின் மூல காரணம் என்றாகிறது.

நாம் பொதுவாக உபாதான காரணம் ஓர் நிமித்த காரணத்தை எதிர்பார்த்தே அமையக் காண்கிறோம். (பானை உதாரணத்தில் மண், பானை ஆக ஒரு குயவன் தேவை) இது நடக்க ஒரு சூழலும் தேவை. இவ்விஷயத்தில் ப்ரஹ்மம் ஓர் வேறுபட்ட நிமித்த காரணத்தை எதிர்பார்க்காது. ப்ரஹ்மம் எல்லா வகையிலும் ஒப்பற்றதும், ஸர்வவ்யாப்தனாயும் உள்ளதால் அது ஸர்வசக்தனாயும் இருப்பதை அறியத் தடையில்லை. ”அத்விதீயம்” சப்தம் ப்ரஹ்மம் மற்றொரு நிமித்த காரணம் அல்லது உதவியை எதிர்பார்க்கிறது என்பதை மறுக்கிறது.

ப்ரஹ்மத்துக்கு எல்லா சக்திகளும் உண்டு என்பதால் பல ச்ருதி வாக்யங்கள் ப்ரஹ்மம் முதலில் உபாதான காரணம், பிறகு அதுவே நிமித்த காரணமும் என நமக்குக் காட்டுகின்றன,

கருத்துரை

இப்போது விவாதாஸ்பதமான ச்ருதி வாக்யத்தை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். அவர் எழுப்பும் ஆக்ஷேபம் ச்ருதி வாக்கியத்தின் பொருள் செழுமையையும் உபதேச அர்த்தத்தையும் மிகக் குறைத்துவிடுகிறது. ப்ரஹ்மத்தைத் தவிர இன்னொன்றை மறுதலிக்கவே “ஏவ” எனும் சொல்.

ஆசிரியர் இதைவிட இன்னும் இது விரிவானது என்கிறார். இதிலுள்ள பானை உதாரணத்தால் இதை விளக்குகிறார்.

இதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் கொண்டது. நாம ரூபங்களில்லாத ப்ரபஞ்சத்துக்குக் காரணம் ப்ரஹ்மம், நாம ரூபங்கள் கொண்ட ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் கார்யம். ”இதம்” எனும் இப்போதுள்ள நிலை ப்ரஹ்மத்தின் சரீரம்/வடிவம். ப்ரஹ்மம் தன ஆற்றலால் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுகிறது. இவ்வாறு ப்ரஹ்மம் உபாதான காரணமாயும், நிமித்த காரணமாயும் உள்ளது.  

பத்தி 41

மற்ற ச்ருதி வாக்யங்களில் முதலில் ப்ரஹ்மம் நிமித்த காரணம் என்றும் பிறகு எது உபாதான காரணம் என்றும் விசாரிக்கப் படுகிறது. முடிவாக, ப்ரஹ்மமே உபாதான காரணம் உள்பட எல்லாக் காரணமும் என்று சொல்லப்படுகிறது.

ரிக் வேதத்தில் சொல்லப்படுவதைப் பாருங்கள்:

கிம்ஸ்வித் வனம்? க உ ஸ வ்ருக்ஷ ஆஸீத்? யதோ த்யாவாப்ருத்வீ நிஸ்ததுக்ஷு, மனீஷினோ மனஸா ப்ருச்சதே து தத், யத் அத்யாதிஷ்டத்-புவனாநி தாரயன் I

ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத்I யதோ த்யாவா ப்ருத்வீ நிஸ்ததக்ஷு மனீஷினோ மனஸா விப்ரவீமி வஹ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவனானி தாரயன்I

[காடு எது? ஆகாசமும் பூமியும் உருவான மரங்கள் எவை? ஞானிகள் தங்கள் மனதில் தேடுகிறார்கள். எந்த ஆதாரத்தால் ப்ரபஞ்சங்கள் தாங்கப்படுகின்றன?

ஞானவான்களே! நான் இதை என் மனதில் நன்கு ஆராய்ந்து சொல்கிறேன்; ப்ரஹ்மமே காடு; ப்ரஹ்மமே மரம்; ப்ரஹ்மம் ஆகாசத்தையும் பூமியையும் உருவாக்கித் தானே தாங்குகிறது.]

பொதுவாக, ஒரே வஸ்துவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருப்பதில்லை. இந்த ஸந்தேஹம் ப்ரஹ்மம் விசேஷமானது மிக வேறுபட்டது என தெளிவிக்கப்படுகிறது.

கருத்துரை

வீடு கட்ட மரம் தேவையான மரப் பொருள் தருகிறது. இது உபாதான காரணம். தச்சன் மரத்தைக் காட்டிலிருந்து தேடிக் கொண்டு வந்து தக்க கருவிகளையும் கொண்டு மரத்தைப் பொருள் ஆக்குகிறான்.  

ப்ரஹ்மம் தான் மரம். அதுவே மரம் உள்ள வனம், ப்ரஹ்மமே உருவாக்கும் தச்சன், ப்ரஹ்மமே இவ்வெல்லாவற்றுக்கும் ஆதாரம்.  “ஸதேவ” ச்ருதியும் இதுவும் ஒரே கருத்தை வெளியிடுகின்றன.

பத்தி 42

ப்ரஹ்மத்தை வேறு ஒரு தொடர்புகளும் இயல்வுகளும் அற்றதாகக் காட்ட விழையும் அத்வைதிக்கு இந்த வேத வாக்கியம் துளியும் பயன்படாது. ‘அக்ரே’ எனும் சொல் கால ப்ரமாணம் காட்டுவது, ‘ஆஸீத்’ என்பது கார்ய பாவம் (மாறும் நிலை) காட்டுவது. இவ்வாறாக, காரண-கார்ய ரூபத்தில் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கான உபாதான மற்றும் நிமித்த காரணத் தொடர்பு விளக்கப் படுகிறது. இப்படி ப்ரஹ்மம் விசேஷமானது, எல்லா சக்திகளும் நிரம்பியது எனத்  தெரிகிறது. மற்றபடி தெரியாத வேறு ஸம்பந்தங்களும் இயல்புகளும் கூட ச்ருதி வாக்யங்களால் தெரிகின்றன.

பத்தி 43

இந்த ச்ருதி வாக்யம் காரண கார்யங்களின் உண்மைத் தொடர்பை விளக்க வந்தது. ஆகவேதான் இது, ‘அஸத் ஏவ இதமக்ர ஆஸீத்’ (உயிரற்றதே முதலில் இருந்தது) என்று சொல்லி, பின் இல்லாததிலிருந்து உள்ளது வரக்கூடும் என்பதை மறுக்கிறது. இவ்வாக்யம், ‘குதஸ்து கலு ஸோம்ய ஏவம் ஸ்யாத்’ (அன்பனே! இது எப்படி இவ்வாறு இருக்கக் கூடும்?’) என்று கேட்கிறது.   

இவ்வினாவின் உட்கிடையாவது – முதலில் இல்லாதது மட்டுமே இருந்திருந்தால், காரணமற்ற ஸ்ருஷ்டி எனும் முரண் ஏற்படும். இது மேலும் ‘கதமஸதஸ் ஸஜ்ஜயேத’ (இருப்பது இல்லாததிலிருந்து எங்ஙனம் உருவாகும்?) எனும் கேள்வியால் வலியுறுத்தப் படுகிறது. பானைக்கு மண்ணின் இயல்பு இருப்பது போன்றே இதுவும்.  

பத்தி 44

ஒன்றை அறிந்துகொள்வதன் மூலம் எல்லாம் அறியப்பட்டதாகிறது என்பது இவ்வுபதேசம். இப்படிச் சொல்வதன் காரணம், ஒரே வஸ்துவே காரணமாயும், தன் நிலையில் மாற்றம் ஏற்பட்டபின் கார்யமாயும் உள்ளதே.

இல்லாததிலிருந்து உள்ளது எழும் என்றால் ஒன்றை அறிவதன் மூலம் எல்லாம் அறியப்படும் என்பது நிற்காது. ஏன் எனில் முரண்பட்ட பொருள்களை ஒன்றன் வழி இன்னொன்றை க்ரஹிக்க முடியாது. இக்கொள்கைப்படி உபாதான நிமித்த மற்றும் ஸஹகாரி காரணங்கள் தம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விளைவைத் தருகின்றன. ஆகில், ஒரு காரணத்தை அறிந்தால் அதன் விளைவை அறிய முடியாது!

இந்த (ஸாங்க்ய) தத்வம் சொல்பவர் பழைய வஸ்துவிலிருந்து புது வஸ்துக்கள் வரலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது அப்படி அன்று. புது வஸ்துக்கள் பழையனவற்றின் வேறுபட்ட, மாறுபட்ட புது வடிவங்களே. காரணத்திலிருந்து முற்றிலும் முரண்பட்ட கார்யம் என்பதை நாம் மறுப்பதே ஒரு வேறுபாடு. கார்யம் என்பது காரணத்தின் வேறுபட்ட படிவ மாற்றம் என்பது இல்லாவிடில் காரணங்களிலிருந்து கார்யங்கள் விளைவதென்பதே இராது. ஆகவே, கார்யம் என்பது காரணத்தின் மாறுபாடான தோற்றங்கள் என்பது பொருந்தும்.

கருத்துரை

இந்த உபதேசத்தின் உண்மைக் காரணம் ஆசிரியரால் சொல்லப் படுகிறது. இது, அஸத் கார்யவாதத்தை மறுதலித்து, ஸத் கார்ய வாதத்தை நிலை நாட்ட இந்த உதாரணம் பயன்படுகிறது. வேத உபதேசத்தின் லக்ஷ்யம் ஸத் காரணம் என்பதே. காரண கார்ய பாவத்தில் ஒன்றை அறிந்துகொள்வதால் எல்லாம் அறியப்படுவது என்ற பொருள் உள்ளதாகிறது.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/11/vedartha-sangraham-12/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Leave a comment