Author Archives: jananiramanujadasi

வேதார்த்த ஸங்க்ரஹம் 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 15

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

அத்வைத விமர்சம்

பத்தி 66

எல்லா பேத ஞானத்தையும்  நீக்கும் ஞானம் எங்கிருந்து பிறக்கிறது? வேதங்களிலிருந்து என்றால் அது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. ப்ரபஞ்சம் மாயம் என்கிற   ஞானத்தை நீக்கும் ஆற்றல் வேதங்களுக்கு இல்லை. ஏனெனில் அவை (1) ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை, (2) அவையே அவித்யையின் விளைபொருள்கள்.

இது இப்படி இருக்கிறது:

ஒருவர் பார்வைக் கோளாறால் ஒரு துண்டுக் கயிற்றைப் பாம்பு என்று எண்ணிவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாயையை  ‘இது பாம்பன்று’ எனும் இன்னொரு ஞானத்தால் நீக்க முடியாது, அந்த ஞானமும் அதே தவறான பார்வையால் விளைந்தால். குழப்பதினால் அது பாம்பு என்று அஞ்சுகிற ஒருவரின் அச்சத்தை அதே குழப்பமுள்ள வேறொருவரால் நீக்க முடியாது. அல்லது குழம்பியுள்ள ஒருவரின் உறுதி மொழியாலும் அது பாம்பன்று என்று தேறாது.

வேதங்களைப் பயிலும் ஒரு வித்யார்த்தி அவை ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை என்று அறிவதால், வேறு பிறவற்றைப் போன்றே வேதங்களும் இந்த மாயை பற்றிய குழப்பத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்று தெரியும்.

கருத்துரை

உண்மைப் ப்ரமாணத்திலிருந்தே உண்மை ஞானம் உண்டாக முடியும். அத்வைதக் கோட்பாட்டில் வேதங்கள் வித்யாசத்தைச் சொல்வதால் அவையும் அஞ்ஞானத்தின் விளைபொருள்களே. எதை நீக்க முயற்சிக்கின்றனவோ அதன் பொருள்களாய் இருப்பதால் வேதங்கள் மாயையை விலக்க நம்பத்தக்க ப்ரமாணங்கள் அல்ல.

பத்தி 67

பேதம் நீக்கும் ஞானம், அறிவோன், இந்த அறிவுக்கு மூலமான வேதங்கள் யாவும் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால் இந்த ஞானத்துக்குட்பட்டவை என ஒருவர் நினைப்பாரேல் மேலும் குழப்பங்கள் விளையும்.  

ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால் இது அதற்குட்பட்டது என்பது பொய்யாகி, ப்ரபஞ்சம் மெய் என்றாகிவிடும்.

ஒருவன் தன மகன் இறப்பதை ஸ்வப்னத்தில் கண்டு, விழித்து எழும்போது மகனை உயிரோடு உள்ளபடி காண்பதுபோலாகும் இது.

தத்வமஸி போன்ற வாக்யங்கள் ப்ரபஞ்சத்தை விளக்கப் போதுமானவையல்ல ஏனெனில் கயிறா பாம்பா எனத் தானே குழம்பியுள்ளவர் சொற்கள் போன்றவையே இவை.

கருத்துரை

அத்வைதி ப்ரஹ்மன் தவிர்த்த யாவும், அது பற்றிய மாயையை அகற்றுவது உள்பட அது நீங்கியவன் உள்பட, மாயையே என்கிறார். உலகம் என்பது அநுபவம் மூலம் உணரப்படுவதால் அதன நீக்கம் பற்றிய மாயத் தோற்றமே அது உண்மை என மெய்ப்பிக்கிறது.

பத்தி 68

இக்கருத்துக்கு ஒரு  பதில் சொல்லலாம்: கனவில் ஒன்றுக்கு அஞ்சினவர் ஏதோ ஒரு நிலையில் இது கனவு என உணர்வாரேல் பயம் நீங்கும் யாவும் கனவு என்ற அறிவால். இதுவும் அதுபோல்தான்.

இவ்விளக்கம் எப்பிரச்னையையும் தீர்க்காது. கனவு என்பதால் பயம் நீங்கிற்று எனும் அறிவு மீண்டும் பயம் வர ஹேதுவாகும்.

வேத வித்யார்த்திக்கே (அத்வைதத்தில்) வேதங்களும் கனவின் பகுதியே என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

கருத்துரை

கனவில் அனுபவிக்கும் பயம் விழித்தெழுந்து உணர்வுறுவதால் நீங்குகிறது. அது கனவு என்கிற கனவுணர்வால்  அன்று.

சில மனச்சிக்கல்கள் இருக்கும்போது விழித்திருக்கும்போதே உண்மையன்று/உலகே கனவு என்றிருப்போரையும் காண்கிறோம். இதனால் மன உளைச்சலும் தொடர்ந்த பயமும் இவர்களுக்குள்ளதும் காண்கிறோம்.

நவீன அத்வைதிகள், கைகாட்டிமரம் சென்று சேரிடம் ஆகாது என இதைச் சமாளிக்க முயற்சி செய்கின்றனர்.  ஆனால் சேரிடத்தைக் காட்டும் கைகாட்டி மரம் நிஜம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே இந்த நவீன அத்வைத விளக்கமும் எடுபடவில்லை,

பத்தி 69

அத்வைதத்தின் மற்றொரு விளக்கம் இப்படியும் அமையலாம்: வேதங்கள் மாயையின் விளைவு, இறுதியில் வெறும் பொய் என்றாலும் ப்ரஹ்மன் தூயது, அபேதமானது எனும் வேதக் கூற்று மெய்தான். எல்லாம் அடக்கமாகும்போது, ப்ரஹ்மன் மட்டுமே நிற்கிறது.

இந்த வாதமும் சரியன்று. சூன்ய வாதிகள் (பௌத்தர்) நோக்கில் ப்ரஹ்மனும் இல்லை, “சூன்யமே உள்ளது” என்பர். பௌத்தர் கூற்று அறியாமையின் விளைவு என அத்வைதி  தள்ள முடியாது. ஏனெனில், அத்வைதியின் நோக்கிலேயே வேதங்கள் ப்ரஹ்மனைச் சொல்வனவும் அறியாமையின் வெளிப்பாடே.

ப்ரஹ்மன் மட்டுமே மெய் என்பதால் ப்ரபஞ்சம் அடங்கிப்போகும் எனில், ப்ரஹ்மனும் சூன்யம் மட்டுமே என்பதில் அடங்கிப்போகும் என்பதே  சரி ஆகும்.

உண்மையில் (சூன்ய வாதம் செய்யும்) பௌத்தர், (ப்ரஹ்மன் ஒன்றே உண்மை மீதி யாவும் பொய் எனும்) அத்வைதி இருவருமே தத்வ விசாரத்தில் இறங்க உரிமை அற்றவர்கள். ஏனெனில் அவர்கள் தத்வத்தில் ஒன்றைவிட மற்றொன்று மேலும் அறிவு பூர்வமானதா என அறிந்துகொள்ளும் ஞானமுண்டு என்பதை ஏற்கும் இடமுண்டு. இருவருக்குமே அறிவை அடையும் வழிகள் யாவும் மாயை, அந்த நிலையிலேயே அவர்கள் தத்வ விசாரம் அடங்கிவிடுகிறது!  இது ஆசார்யர்கள் பிறராலும் காட்டப் பட்டுள்ளது.

கருத்துரை

தத்வ ஞானத்தில் அடிப்படையாவது , ஞானத்தின் மூலம் (ப்ரமாணம்) தத்வத்தின் முடிவு (ஸித்தாந்தம்) போன்றே உண்மையாய் இருத்தல் வேண்டும்.  முடிபு, சித்தாந்தம் எவ்வளவு முக்யமோ அவ்வளவு முக்கியமானது ப்ரமாணமும். நம் நோக்கு, ஞானம், எல்லாவற்றிற்கும் அடிப்படையான ப்ரமாணத்தையே மறுப்பது/வினவுவது, உட்கார்ந்துள்ள மரத்தையே வெட்டுவது போலாகும். அப்படிச் செய்பவர்கள் தத்வ விசாரத்துக்குத் தகுதியற்றவர்கள்.  

பத்தி 70

நாம் காணும் ப்ரபஞ்சம் இறுதியில் பொய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்?

ஒரு வேளை  இப்படிச் சொல்லலாம்: த்ருஷ்டி என்பது அறியாமையின் விளைவு எனவே உண்மையை அறிவதில் பிழைபட்டது.  குறையற்ற முறைகளால் நமக்கு ப்ரபஞ்சம் பற்றிய ஞானம் கிடைக்கிறது.

இவ்விடையும் பிழையானது. பேதானுபவம் தரும் ப்ரத்யக்ஷத்தால் என்ன குறை உண்டு? அது காலம் காலமாக நமக்கு வரும்  பழக்கமல்லவா? ! ப்ரத்யக்ஷம் மட்டும் அன்று, வேதமும் அந்த அஞ்ஞானத்தின் வெளிப்பாடே! இரண்டும் அஞ்ஞானத்தின் வெளிப்பாடுகும்போது ஒன்றை மற்றொன்று விலக்க முடியாதே.

பத்தி 71

மாறாக, நம் ஸம்ப்ரதாயம் மரபு வெவ்வேறு ஞானக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வருகிறது. ப்ரத்யக்ஷம் என்பது நிலம் நீர் ஆகாசம் எனும் பூதங்களையும் அவற்றின் குணங்களான ஒளி ஒலி சுவை ஸ்பர்சம் முதலானதுகளையும் அவற்றின் வழி மனிதர் முதலான உயிர் இனங்களையும் தழுவியது. வேதங்கள் இவ்வெல்லாவற்றையும் தன் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை அறிவதும், வழிபட்டு த்யானிப்பதும் அவரை அடைவதுமான வழிகளைக் காட்டுகிறது இந்த ப்ரத்யக்ஷத்துக்கும் வேதங்களுக்கும் முரண்பாடு இல்லை.

கருத்துரை

ப்ரத்யக்ஷமும் வேதங்களும் பரஸ்பரம் சார்புள்ளவை.

பத்தி 72

வேதங்களை அநாதியானவை, தொடக்கம் முடிவு அற்றவை இடையறாத ஆன்மீக மரபுள்ளவை என்று மதிப்போர்  அவ்வேதத்தை அநுஸரித்த ப்ரத்யக்ஷத்தையும் ஏற்க வேண்டும்.

ஆகவே தவறான அடிப்படையில் எழுந்துள்ள இவ்வாதங்களை மறுக்க இவ்வளவே போதும். இவை வேதங்களின் உண்மையை, உயர்வை நூற்றுக்கணக்கான சான்றோர் நிலை நாட்டியபடி நின்று நிலவும்.

“அத்வைத விமர்சம்” பகுதி முற்றியது.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/15/vedartha-sangraham-16/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

வேதார்த்த ஸங்க்ரஹம் 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 14

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

அத்வைத விமர்சம்

 

பத்தி 58

ஆக்ஷேபம் செய்பவர் சொல்கிறார்: நாங்கள் அவித்யாவைப் பிரஸ்தாவிப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன….1. வேதங்கள் அவித்யாவைப் பற்றி பேசுகின்றன.  2. தனி ஓர் ஆத்மா ப்ரஹ்மம் போன்றது என்று சொல்ல அது தேவைப் படுகிறது. ஆகவே அவித்யா ப்ரஹ்மத்தை மூடியுள்ள குறை என்று சொல்கிறோம்.

பதில்: உலகமே பொய்; அது அவித்யையைச் சார்ந்துள்ளது. அவித்யை இவ்வளவு பொய்யானால், அது இன்னொரு மாயையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்போது, ப்ரஹ்மமே மாயைக்குக் காரணமும் விளக்கமும் ஆகிவிடும்.

அவித்யா அநாதி (ஆரம்பமற்றது) என்பது இப்பிரச்னையைத் தீர்க்க உதவாது. அவித்யா ஆரம்பமற்றது  என்கிற சிந்தனையும் ப்ரஹ்மத்தின் அவித்யையோடு இயைந்ததே. அவித்யையை விளக்க உங்கள் தத்வத்தில் வேறு எந்த  உண்மைக் காரணமும் ஒப்புக்கொள்ளப்படாததால் மாயைக்கு ப்ரஹ்மமே காரணம் என்று ஏற்றுக்கொள்ளப் வேண்டும். அப்படி என்றால் ப்ரஹ்மம் சாஸ்வதம் ஆனபடியால் மாயை சாஸ்வதம் என்றாகி ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரமே முடியாது என்றாகிவிடும்.

பத்தி 59

கீழே கண்ட  விவரணங்களினால் ஒரே ஒரு ஜீவன் {ஆத்மா} தான் உள்ளது என்பது மறுதலிக்கப் பட்டதாகிறது. இந்தத் தவறான கொள்கை ஒரே ஒரு சரீரம் ஓர் ஆத்மாவை உடையதாயுள்ளது, பிற சரீரங்களுக்கு ஆத்மா இல்லை எனும் தவறான கோட்பாடுள்ளதாகிறது. இந்நிலைப்பாடு கனவு காண்பவர்க்கு மட்டும் ஆத்மா உண்டு, கனவில் அவர் காணும் மக்களுக்கு ஆத்மா கிடையாது என்பதுபோல் உள்ளது. ஆகவே ஒரே ஓர் ஆத்மாவைத் தவிரப் பிற யாவும் உண்மையன்று.

பத்தி 60

மேலும் உங்கள் கோட்பாட்டில் நீங்கள் ப்ரஹ்மம் தன்  உண்மை ஸ்வரூபத்துக்கு மாறாக தனிப்பட்ட ஜீவர்கள் சரீர பாவனையை உருவாக்குவதாகக் கூறுகிறீர்கள். ஒரே ஒரு சரீரம் மட்டுமே ஆத்மாவை உடைத்தாயினும், அந்த சரீரம் உண்மை அன்று ஏனெனில் அந்த ஆத்மாக்கள் உண்மை அல்ல. ஆகவே ஒரே ஒரு சரீரம் மட்டுமே ஆத்மா உடையது என்பது பொருத்தமற்றது.  

ஆயினும், நாங்கள் கனவு காண்பவரின் கனவில் வரும் நபர்களின் சரீரங்கள் ஆத்மாக்களை மறுப்பதில்லை. விழித்திருக்கும்போது கனவில் வந்தவர்களின் சரீர ஆத்மாக்களின் உண்மையையே மறுக்கிறோம்.

பத்தி 61

அவித்யையை ஒழிப்பது எப்படி சாத்தியமாகிறது? அந்த முடிவின் இயல்பு என்ன?

(ப்ரதிவாதியின் விடை} வஸ்துவை உள்ளபடி அறிந்து கொள்ளுதல் அவித்யையை அழிக்கிறது. அதன் முடிவு அவித்யையின் நேர் மாறுபாடான விவரணங்களுக்கு அப்பாற்பட்ட அநிர்வசனீயமான ஒரு விஷயம்.

பத்தி 62

{பதில்} அவித்யை நிர்ணயிக்க முடியாததாயின், அதற்கு நேர் மாறான ஒன்று நன்கு நிர்ணயிக்கப் பட்டதாகிறது. இது உண்மை, அல்லது பொய், அல்லது இரண்டுமாய் இருக்கவேண்டும். வேறு ஒரு ப்ரசக்தியும் இல்லை. அவித்யையின் முடிவு ப்ரஹ்மத்தைத்தவிர வேறாய் இருக்க வழியில்லை, ப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றை அறிவதே அவித்யையின் விளைவு. ஆனால் அது ப்ரஹ்மமே ஆயின், ப்ரஹ்மம் எப்போதும் உள்ளதாகையால் அதுவும் எப்போதும் உளதாகிறது. ஆகில் அவித்யை அழிக்கப்பட்டதாகிறது, வேதாந்த ஞாநம் இல்லாமலே.  இவ்வாறாக ஒன்றாய் இருப்பதான (அத்வைத) ஞாநம் அவித்யையை அழிக்கிறது. இந்த ஞாநம் இன்மை பந்தத்தை விளைகிறது எனும் வாதம் அடிபட்டுப் போகிறது.

பத்தி 63

இன்னொரு ப்ரச்சினையும் உண்டு. ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்று எனும் ஞாநம் அவித்யையை அழிக்கிறது எனில் இந்த ஞானமே அவித்யையின் விளைவு/வடிவம் ஆகும். அவித்யையின் ஒரு வடிவம் எவ்வாறு அவித்யையை அழிக்கும் என நீவிர் விளக்க வேண்டும். ஒரு வேளை, நெருப்பு விறகை எரித்து இறுதியில் தானும் முடிவதுபோல் அத்வைத ஞானம் எல்லாத் தாற்காலிக வித்தியாசங்களையும் அழித்துத் தானும் மாண்டுபோம் என நீவிர் கூறலாம். அல்லது ஒரு நஞ்சு பிறிதொரு நஞ்சை முறித்து அழிக்கும் என்னலாம். இது சரியன்று.

அவித்யையை அழிக்கும் அறிவு ப்ரஹ்மத்தினின்றும் வேறென்பதால் அது தன் ஸ்வரூபம் முடிவில் பொய்யாய் இருக்க வேண்டும்! ஆகில் இவ்வறிவின் முடிவை நிலைநாட்ட அவித்யை ஏதோ ஒரு வடிவில் இருந்தாக வேண்டும். அறிவின் அஸ்தமனத்தை நிறுத்தும் அவித்யை எப்படி மறைகிறது?

நீர் சொன்ன நெருப்பு, நஞ்சு போன்றே யாவும் முன்பு ஒரு வடிவிலும் பின் மாறுபட்ட வடிவிலும் இருக்கவே செய்யும், முற்றிலும் மறையாது.

பத்தி 64

ப்ரஹ்மத்தைத் தவிர பிறவற்றை அழிக்கும் ஞானத்தை அறியும் ஞாதா (அறிபவன்) யார்? இது ப்ரஹ்மத்தின் மேலேற்றப்படும் அஹங்காரம் ஆக முடியாது. அஹம்காரம் தான் அவித்யையைப் போக்கும் அறிவால் அழிக்கப்படுமன்றோ! ப்ரஹ்மமே அறிபவன் என்றால், ‘அறிபவனாயிருக்கும் பண்பு’  ப்ரஹ்மத்தின் இயல்வைச் சார்ந்ததா அல்லது மேலேற்றப்பட்டதா என்னும் கேள்வி பிறக்கிறது. இது மேலேற்றப்பட்டதானால், அவித்யையைப் போக்கும் அறிவால் அழிக்கப்படும் என்னும் காரணத்தால் அறிதலை ஏற்படுத்த முடியாது. இதை அழிக்க வேறொரு அறிவு உண்டு என்றாலும், அந்த அறிவை அறிவதற்கும் (1) அறிபவன், (2) அறிவு, (3) அறியப்படும் பொருள் என்னும் மூன்று அம்சங்கள் நிச்சயமாக அமைந்திருக்கவேண்டும். ஆக, வேறொரு அறிவையும் அறிய ஒரு அறிபவன் வேண்டும். அந்த அறிபவனும் பிரஹ்மத்தின் மீது மேலேற்றப்பட்ட அவித்யையின் வடிவமானால், மீண்டும் அதை அழிக்க வேறொரு அறிவு, அதற்கு வேறொரு அறிபவன், என்று இவ்வாறு முடிவில்லாமல் குழப்பமே மிஞ்சும். “வெறும் அறிவு” என்றொன்று இருக்கவே முடியாது. எல்லா அறிதலிலும் (1) அறிபவன், (2) அறிவு, (3) அறியப்படும் பொருள் இன்றியமையாதவை. இந்த மூன்று அம்சங்களோடு கூடாத அறிவால் அவித்யையைப் போக்க முடியாது, வெறும் அறிவான ப்ரஹ்மத்தால் அவித்யையைப் போக்க முடியாதது போல்.  

இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க ப்ரஹ்மமே உண்மையில் அறிவோன், மாயையால் மூடப்பட்டல்ல, என்பீராகில் எங்கள் கருத்தை ஏற்றவராவீர்.

பத்தி 65

அவித்யை நீக்குவது, அறிவை அறிவது என்பனவும் இதன் பகுதியே என்பது நகைப்புக்குரியது.

தேவதத்தன் தரையைத் தவிர பிறவற்றை அழித்தான்” என்பதில் எல்லாவற்றையும் என்பது அழிக்கும் செயலையும் குறிக்கும் என்பதுபோல் ஆகிவிடும்.

கருத்துரை

இந்த வாதங்களைப் புரிந்துகொள்ள சில விளக்கங்கள் தேவை.

அவித்யையை ஆதரிப்பதில்லை அத்வைதத்தின் அடிப்படை. இந்த அவித்யை வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதுவே அறிவுப் பிறழ்ச்சிக்குக் காரணமான மாயையை விளக்கவல்லது என்பதாம். இந்த மாயை ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று எனும் அறிவால்  நீங்கிப் போகும் (என்பது அவர்கள் வாதம்.}

ஆசிரியர் அத்வைதத்தில் அவித்யைக் கோட்பாடு குறைபட்ட வகையில் நிறுவப்பட்டுள்ளது எனக் காட்டுகிறார்.

  • ப்ரஹ்மம் அவித்யையின் அடிவேர், மோக்ஷம் என்பது நடவாது.

மாயை முழுவதும் அவித்யை சார்ந்தது. அவித்யை எதைச் சார்ந்தது? அது பொய் ஆதலால் அது எதையாவது சார்ந்தே இருக்க வேண்டும். அது தானே நிலை நிற்குமாகில், அதை அழிக்கவே முடியாது எப்போதும் தழைத்தே நிற்கும். இறுதியில் அது ஸத்யம் ஆகிவிடும்.

அது வேறொன்றால் தாங்கப்படுமாகில், அதைத் தாங்க ப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில் ப்ரஹ்மமே நித்யம் அதைத் தாங்கி நிற்கும். அதனால் அவித்யையும் நித்யம் என்றாகிவிடும்.

அவித்யை ஆரம்பமற்றது என்று சொல்வது இக்கேள்விக்கு விடை ஆகாது. அது ஒரு மாயை என்ற அளவிலேயே தொடக்கமற்றது, மெய்ப்பொருள் என்று அன்று.  அதை விளக்கவல்ல மெய்ப்பொருள் ப்ரஹ்மமே.

விசிஷ்டாத்வைதத்தில் ப்ரஹ்மம் ப்ரபஞ்சம், ஜீவர்கள் இரண்டையும் தாங்குபவன். அவனைத் தவிர மற்ற யாவும் அவனால் நியமிக்கப் பட்டு, இயக்கப் படுபவை. “பதிம் விச்வஸ்ய ஆத்மேச்வரம்”. ப்ரபஞ்சம் பொய் அன்று. அது ப்ரஹ்மனைச் சார்ந்துள்ளது. ஆத்மாக்கள் யாவும் ஸத்யம், ப்ரஹ்மனோடு இயைந்துள்ளபோது அவற்றின் மோக்ஷம் ப்ராப்தமாகிறது. ப்ரஹ்மனோடு இயைந்து (அனுகூலமாக) அல்லது இயையாது இருப்பது மோக்ஷம் அல்லது தளை (பந்தம்) நிலையைக் காட்டுகிறது.

புத்த தத்வத்தின் வெளிப்படையான தோல்வியை நிறுத்த முற்பட்ட அத்வைதம் அதே குழியில் வீழ்ந்துபட்டது. அவரால் அவித்யையை விளக்க முடியாமல் அது தொங்குகிறது. அது பொய் ஆதலால் அதை ஏதாவதோர் உண்மையோடு பிணைக்க வேண்டும். பாம்பு பற்றிய மாயை கயிறாகிய நிஜத்தோடு பிணைக்கப் பட்டுள்ளது. கானல் நீராகிய மாயை நிலத்தோடு பிணைந்துள்ளது. ஆதலால் ப்ரஹ்மமே அவித்யையைத் தாங்குகிறது என்பதாகிறது.

அத்வைத ப்ரஹ்மன் ஓர் இயல்வும் அற்றவன், ஞானம் தவிர வேறற்றவன். ஆதலால் அவனால் இம்மாயையை விளக்க முடியவில்லை, பிரம்ஹன் செயலற்றுள்ளான்!! ப்ரஹ்மன் நித்யன், ஆகவே செயலற்றுள்ள ப்ரஹ்மன் தாங்கும் மாயையும் நித்யமே. ஆகவே அவித்யையிலிருந்து விடுபடுவது என்பது இயலாது.  

  • ஐக்யம் (அபேதம்) பற்றிய ஞானமும் விளக்கப்படாமல் விடப்பட்டது.

அத்வைதம் அவித்யையை மட்டுமின்றி அதை விலக்கும் ஞானத்தையும் விளக்காமல் விட்டது. அவித்யையை விலக்கும் ஞாநம் ஒரு தெளிவான வடிவுள்ளது, ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுவது ஆகவே அந்த ப்ரஹ்மன் உள்பொருளற்ற வெற்றிடமாக முடியாது, இயல்புகளற்ற ஞானமாக முடியாது.

அவித்யை நீக்கும் ஞாநம் ப்ரஹ்மத்திலிருந்து வேறாகில், அது அழிக்கப் படவேண்டிய அவித்யையின் பகுதியாகிவிடும்! ஏனெனில் அத்வைதத்தில் ப்ரஹ்மன் தவிர வேறெதுவும் அவித்யையே. அது ப்ரஹ்மனோடு ஓப்பாகில், பிரம்மன் நித்யமாதலால், இந்த அவித்யை நீக்கும் ஞானமும் நித்யம். அதனால் அவித்யை மறுபடி எழவே எழாது.

அத்வைதியால் இந்த ஞாநத்தை ப்ரஹ்மத்தோடு இணைத்துக் காண முடியாது, அதை அவித்யையின் பாகமாகவே கருத முடியும். அப்படியாகில், அவித்யையை அழிக்கும் அறிவை எது அழிக்கிறது?

முன்பும் இப்போதும் அத்வைதிகள் இதற்குத்தரும் ஒரு சாமான்ய விளக்கம் மரத்தை நெருப்பு எரிப்பதுபோல் அவித்யையும் தானே கருகி விடுகிறது, நஞ்சை நஞ்சு முறிப்பதுபோல்  என்று.

நன்கு ஆராய்ந்தால், நெருப்பு எரித்தாலும் வேறு வடிவத்தில் மரம் இருக்கும், முற்றிலும் அழிவில்லை எனப் புலப்படும். மரத்தை எரிக்கும் நெருப்பு மரத்தைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. ஆகவே அத்வைதிகள் கோட்பாட்டுக்குத் தார்க்கிக அடிப்படை இல்லை. ஒரு நஞ்சை இன்னொரு நஞ்சு ஸமானப் படுத்தலாம். ஆனால் இங்கு உண்ட நஞ்சும் ஸமானமான மருந்து நஞ்சும் வெவ்வேறு!! வெவ்வேறாக இல்லாத போது நஞ்சை இரட்டிப்பாக உண்டால் கேடில்லை என்றாகிவிடும்.  முதலில் அருந்தப்படும் நஞ்சால் உடலுக்கு ஒரு நிலை பிறந்து, அந்த நிலையை இரண்டாவதாகக் கொள்ளப்படும் வேறு நஞ்சு குறிக்கிறது என்பது தானே பொருத்தமாகும். முறிக்கப்படுவதும் முறிப்பதும் வெவ்வேறான இயல்புகளை உடையவை என்பதே ஆராய்ந்தால் தேறும் உண்மை.

அவித்யை நீக்கும் ஞானம் உண்மையில் அவ்வாறன்று. இந்த ஞானம் பொய்யானதால் அதை அழிக்க எதிர்பார்க்கும் அவித்யையும் அப்படியே.  இந்த ஞானம் ப்ரஹ்மன் இல்லாததால், ஞாநம், ஜ்ஞேயம், ஞாதா எனும் மூவகை ஞான குணகங்களே உண்மை.

இந்த ஞாதா என்னும் அறிவோன் யார்? மாயையால் மூடப்பட்ட ப்ரஹ்மன் இல்லவே இல்லை, ஏனெனில் அறிவோன் தானே அறியும் அறிவாக முடியுமா? ப்ரஹ்மனும் இல்லை ஏனெனில் அத்வைத ப்ரஹ்மன் அறிவோன் அல்லன்.

அறிவோன் அறிவை அறிந்துளான் என்பது சரியன்று. ஊன்றிப் பார்க்கில், முதல் அறிவே கனிந்து காலத்தில் ஞானமாகிறது. ஞானம் அவித்யையின் கார்யமாகில் அது அவித்யையை அழிக்காது. நெருப்பே நெருப்பை அணைக்காது. அது வேறு ஒன்றை எரிக்கும் அவ்வளவே.

தேவதத்தன் தரை தவிர எல்ல்லாவற்றையும் அழித்தான் எனில் அவன் தான் நின்ற தரை தவிர மீதி அனைத்தையும் அழித்தான் என்றே பொருள். ஆனால், அழிப்பது எனும் காரியத்தை அவன் அழித்தான் என்றாகாது. அப்படிச் சொன்னால் அது கேலிக்குரியது.

ஆகவே, கவர்ச்சிகரமாக எடுத்துரைக்கப்பட்ட அத்வைத சித்தாந்தம் தார்க்கிகமாக நில்லாது என்பதோடு அத்யாத்மீகத் தேடலில் தவறான வழியும் காட்டிவிடும் என்பது தெளிவு.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/14/vedartha-sangraham-15/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org